| திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம் | 
| ஆறாம் திருமுறை | 
| 6.50 திருவீழிமிழலை - திருத்தாண்டகம் | 
| போரானை ஈருரிவைப் போர்வை யானைப் புலியதளே யுடையாடை போற்றி னானைப்
 பாரானை மதியானைப் பகலா னானைப்
 பல்லுயிராய் நெடுவெளியாய்ப் பரந்து நின்ற
 நீரானைக் காற்றானைத் தீயா னானை
 நினையாதார் புரமெரிய நினைந்த தெய்வத்
 தேரானைத் திருவீழி மிழலை யானைச்
 சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே.
 
 | 1 | 
| சவந்தாங்கு மயானத்துச் சாம்ப லென்பு தலையோடு மயிர்க்கயிறு தரித்தான் றன்னைப்
 பவந்தாங்கு பாசுபத வேடத் தானைப்
 பண்டமரர் கொண்டுகந்த வேள்வி யெல்லாங்
 கவர்ந்தானைக் கச்சியே கம்பன் றன்னைக்
 கழலடைந்தான் மேற்கறுதத காலன் வீழச்
 சிவந்தானைத் திருவீழி மிழலை யானைச்
 சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே.
 
 | 2 | 
| அன்றாலின் கீழிருந்தங் கறஞ்சொன் னானை அகத்தியனை யுகப்பானை அயன்மால் தேட
 நின்றானைக் கிடந்தகடல் நஞ்சுண் டானை
 நேரிழையைக் கலந்திருந்தே புலன்க ளைந்தும்
 வென்றானை மீயச்சூர் மேவி னானை
 மெல்லியலாள் தவத்தினிறை யளக்க லுற்றுச்
 சென்றானைத் திருவீழி மிழலை யானைச்
 சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே.
 
 | 3 | 
| தூயானைச் சுடர்ப்பவளச் சோதி யானைத் தோன்றிய எவ்வுயிர்க்குந் துணையாய் நின்ற
 தாயானைச் சக்கரமாற் கீந்தான் றன்னைச்
 சங்கரனைச் சந்தோக சாம மோதும்
 வாயானை மந்திரிப்பார் மனத்து ளானை
 வஞ்சனையால் அஞ்செழுத்தும் வழுத்து வார்க்குச்
 சேயானைத் திருவீழி மிழலை யானைச்
 சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே.
 
 | 4 | 
| நற்றவத்தின் நல்லானைத் தீதாய் வந்த நஞ்சமுது செய்தானை அமுத முண்ட
 மற்றமரர் உலந்தாலும் உலவா தானை
 வருகாலஞ் செல்காலம் வந்த காலம்
 உற்றவத்தை யுணர்ந்தாரும் உணர லாகா
 ஒருசுடரை யிருவிசும்பி னூர்மூன் றொன்றச்
 செற்றவனைத் திருவீழி மிழலை யானைச்
 சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே.
 
 | 5 | 
| மைவான மிடற்றானை யவ்வான் மின்போல் வளர்சடைமேல் மதியானை மழையா யெங்கும்
 பெய்வானைப் பிச்சாட லாடு வானைப்
 பிலவாய பேய்க்கணங்க ளார்க்கச் சூலம்
 பொய்வானைப் பொய்யிலா மெய்யன் றன்னைப்
 பூதலமும் மண்டலமும் பொருந்தும் வாழ்க்கை
 செய்வானைத் திருவீழி மிழலை யானைச்
 சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே.
 
 | 6 | 
| மிக்கானைக் குறைந்தடைந்தார் மேவ லானை வெவ்வேறாய் இருமூன்று சமய மாகிப்
 புக்கானை எப்பொருட்கும் பொது வானானைப்
 பொன்னுலகத் தவர்போற்றும் பொருளுக் கெல்லாந்
 தக்கானைத் தானன்றி வேறொன் றில்லாத்
 தத்துவனைத் தடவரையை நடுவு செய்த
 திக்கானைத் திருவீழி மிழலை யானைச்
 சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே.
 
 | 7 | 
| வானவர்கோன் தோளிறுத்த மைந்தன் றன்னை வளைகுளமும் மறைக்காடும் மன்னி னானை
 ஊனவனை உயிரவனை யொருநாட் பார்த்தன்
 உயர்தவத்தின் நிலையறிய லுற்றுச் சென்ற
 கானவனைக் கயிலாய மேவி னானைக்
 கங்கைசேர் சடையானைக் கலந்தார்க் கென்றுந்
 தேனவனைத் திருவீழி மிழலை யானைச்
 சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே.
 
 | 8 | 
| பரத்தானை இப்பக்கம் பலவா னானைப் பசுபதியைப் பத்தர்க்கு முத்தி காட்டும்
 வரத்தானை வணங்குவார் மனத்து ளானை
 மாருதமால் எரிமூன்றும் வாயம் பீர்க்காஞ்
 சரத்தானைச் சரத்தையுந்தன் றாட்கீழ் வைத்த
 தபோதனனைச் சடாமகுடத் தணிந்த பைங்கட்
 சிரத்தானைத் திருவீழி மிழலை யானைச்
 சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே.
 
 | 9 | 
| அறுத்தானை அயன்றலைகள் அஞ்சி லொன்றை அஞ்சாதே வரையெடுத்த அரக்கன் றோள்கள்
 இறுத்தானை எழுநரம்பி னிசைகேட் டானை
 இந்துவினைத் தேய்த்தானை இரவி தன்பல்
 பறித்தானைப் பகீரதற்காய் வானோர் வேண்டப்
 பரந்திழியும் புனற்கங்கை பனிபோ லாங்குச்
 செறித்தானைத் திருவீழி மிழலை யானைச்
 சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே.
 
 | 10 | 
| திருச்சிற்றம்பலம் | 
| திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம் | 
| ஆறாம் திருமுறை | 
| 6.51 திருவீழிமிழலை - திருத்தாண்டகம் | 
| கயிலாய மலையுள்ளார் காரோ ணத்தார் கந்தமா தனத்துளார் காளத் தியார்
 மயிலாடு துறையுளார் மாகா ளத்தார்
 வக்கரையார் சக்கரமாற் கீந்தார் வாய்ந்த
 அயில்வாய சூலமுங் காபா லமும்
 அமருந் திருக்கரத்தார் ஆனே றேறி
 வெயிலாய சோதி விளங்கு நீற்றார்
 வீழி மிழலையே மேவி னாரே.
 
 | 1 | 
| பூதயணி பொன்னிறத்தர் பூண நூலர் பொங்கரவர் சங்கரர்வெண் குழையோர் காதர்
 கேதிசர மேவினார் கேதா ரத்தார்
 கெடில வடவதிகை வீரட் டத்தார்
 மாதுயரந் தீர்த்தென்னை உய்யக் கொண்டார்
 மழபாடி மேய மழுவா ளனார்
 வேதி குடியுளார் மீயச் சூரார்
 வீழி மிழலையே மேவி னாரே.
 
 | 2 | 
| அண்ணா மலையமர்ந்தார் ஆரூ ருள்ளார் அளப்பூரார் அந்தணர்கள் மாடக் கோயில்
 உண்ணாழி கையார் உமையா ளோடும்
 இமையோர் பெருமானார் ஒற்றி யூரார்
 பெண்ணா கடத்துப் பெருந்தூங் கானை
 மாடத்தார் கூடத்தார் பேரா வூரார்
 விண்ணோர்க ளெல்லாம் விரும்பி யேத்த
 வீழி மிழலையே மேவி னாரே.
 
 | 3 | 
| வெண்காட்டார் செங்காட்டங் குடியார் வெண்ணி நன்னகரார் வேட்களத்தார் வேத நாவார்
 பண்காட்டும் வண்டார் பழனத் துள்ளார்
 பராய்த்துறையார் சிராப்பள்ளி யுள்ளார் பண்டோர்
 வெண்கோட்டுக் கருங்களிற்றைப் பிளிறப் பற்றி
 உரித்துரிவை போர்த்த விடலை வேடம்
 விண்காட்டும் பிறைநுதலி யஞ்சக் காட்டி
 வீழி மிழலையே மேவி னாரே.
 
 | 4 | 
| புடைசூழந்த பூதங்கள் வேதம் பாடப் புலியூர்ச்சிற் றம்பலத்தே நடமா டுவார்
 உடைசூழ்ந்த புலித்தோலர் கலிக்கச் சிமேற்
 றளியுளார் குளிர்சோலை யேகம் பத்தார்
 கடைசூழ்ந்து பலிதேருங் கங்கா ளனார்
 கழுமலத்தார் செழுமலத்தார்க் குழலி யோடும்
 விடைசூழ்ந்த வெல்கொடியர் மல்கு செல்வ
 வீழி மிழலையே மேவி னாரே.
 
 | 5 | 
| பெரும்புலியூர் விரும்பினார் பெரும்பா ழியார் பெரும்பற்றப் புலியூர்மூ லட்டா னத்தார்
 இரும்புதலார் இரும்பூளை யுள்ளா ரேரார்
 இன்னம்ப ரார்ஈங்கோய் மலையார் இன்சொற்
 கரும்பனையாள் உமையோடுங் கருகா வூரர்
 கருப்பறிய லூரார் கரவீ ரத்தார்
 விரும்பமரர் இரவுபகல் பரவி யேத்த
 வீழி மிழலையே மேவி னாரே.
 
 | 6 | 
| மறைக்காட்டார் வலிவலத்தார் வாய்மூர் மேயார் வாழ்கொளி புத்தூரார் மாகா ளத்தார்
 கறைக்காட்டுங் கண்டனார் காபா லியார்
 கற்குடியார் விற்குடியார் கானப் பேரார்
 பறைக்காட்டுங் குழிவிழிகட் பல்பேய் சூழப்
 பழையனூர் ஆலங்காட் டடிகள் பண்டோர்
 மிறைக்காட்டுங் கொடுங்காலன் வீடப் பாய்ந்தார்
 வீழி மிழலையே மேவி னாரே.
 
 | 7 | 
| அஞ்சைக் களத்துள்ளார் ஐயாற் றுள்ளார் ஆரூரார் பேரூரார் அழுந்தூ ருள்ளார்
 தஞ்சைத் தளிக்குளத்தார் தக்க ளூரார்
 சாந்தை அயவந்தி தங்கி னார்தாம்
 நஞ்சைத் தமக்கமுதா உண்ட நம்பர்
 நாகேச் சரத்துள்ளார் நாரை யூரார்
 வெஞ்சொற் சமண்சிறையி லென்னை மீட்டார்
 வீழி மிழலையே மேவி னாரே.
 
 | 8 | 
| கொண்டலுள்ளார் கொண்டீச் சரத்தி னுள்ளார் கோவலூர் வீரட்டங் கோயில் கொண்டார்
 தண்டலையார் தலையாலங் காட்டி னுள்ளார்
 தலைச்சங்கைப் பெருங்கோயில் தங்கி னார்தாம்
 வண்டலொடு மணற்கொணரும் பொன்னி நன்னீர்
 வலஞ்சுழியார் வைகலின்மேன் மாடத் துள்ளார்
 வெண்டலைமான் கைக்கொண்ட விகிர்த வேடர்
 வீழி மிழலையே மேவி னாரே.
 
 | 9 | 
| அரிச்சந் திரத்துள்ளார் அம்ப ருள்ளார் அரிபிரமர் இந்திரர்க்கு மரிய ரானார்
 புரிச்சந் திரத்துள்ளார் போகத் துள்ளார்
 பொருப்பரையன் மகளோடு விருப்ப ராகி
 எரிச்சந்தி வேட்கு மிடத்தா ரேமக்
 கூடத்தார் பாடத்தே னிசையார் கீதர்
 விரிச்சங்கை யெரிக்கொண்டங் காடும் வேடர்
 வீழி மிழலையே மேவி னாரே.
 
 | 10 | 
| புன்கூரார் புறம்பயத்தார் புத்தூ ருள்ளார் பூவணத்தார் புலிவலத்தார் வலியின் மிக்க
 தன்கூர்மை கருதிவரை யெடுக்க லுற்றான்
 தலைகளொடு மலைகளான தாளுந் தோளும்
 பொன்கூருங் கழலடியோர் விரலா லூன்றிப்
 பொருப்பதன்கீழ் நெரித்தருள்செய் புவன நாதர்
 மின்கூருஞ் சடைமுடியார் விடையின் பாகர்
 வீழி மிழலையே மேவி னாரே.
 
 | 11 | 
| திருச்சிற்றம்பலம் | 
| திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம் | 
| ஆறாம் திருமுறை | 
| 6.52 திருவீழிமிழலை - திருத்தாண்டகம் | 
| கண்ணவன்காண் கண்ணொளிசேர் காட்சி யான்காண் கந்திரவரும் பாட்டிசையிற் காட்டு கின்ற
 பண்ணவன்காண் பண்ணவற்றின் றிறலா னான்காண்
 பழமாகிச் சுவையாகிப் பயக்கின் றான்காண்
 மண்ணவன்காண் தீயவன்காண் நீரா னான்காண்
 வந்தலைக்கும் மாருதன்காண் மழைமே கஞ்சேர்
 விண்ணவன்காண் விண்ணவர்க்கு மேலா னான்காண்
 விண்ணிழிதண் வீழி மிழலை யானே.
 
 | 1 | 
| ஆலைப் படுகரும்பின் சாறு போல அண்ணிக்கும் அஞ்செழுத்தின் நாமத் தான்காண்
 சீல முடையடியார் சிந்தை யான்காண்
 திரிபுரமூன் றெரிபடுத்த சிலைய னான்காண்
 பாலினொடு தயிர்நறுநெய் யாடி னான்காண்
 பண்டரங்க வேடன்காண் பலிதேர் வான்காண்
 வேலை விடமுண்ட மிடற்றி னான்காண்
 விண்ணிழிதண் வீழி மிழலை யானே.
 
 | 2 | 
| தண்மையொடு வெம்மைதா னாயி னான்காண் சக்கரம் புட்பாகற் கருள்செய் தான்காண்
 கண்ணுமொரு மூன்றுடைய காபா லிகாண்
 காமனுடல் வேவித்த கண்ணி னான்காண்
 எண்ணில்சமண் தீர்த்தென்னை யாட்கொண் டான்காண்
 இருவர்க் கெரியா யருளி னான்காண்
 விண்ணவர்கள் போற்ற இருக்கின் றான்காண்
 விண்ணிழிதண் வீழி மிழலை யானே.
 
 | 3 | 
| காதிசைந்த சங்கக் குழையி னான்காண் கனக மலையனைய காட்சி யான்காண்
 மாதிசைந்த மாதவமுஞ் சோதித் தான்காண்
 வல்லேன வெள்ளெயிற்றா பரணத் தான்காண்
 ஆதியன்காண் அண்டத்துக் கப்பா லான்காண்
 ஐந்தலைமா நாகம்நா ணாக்கி னான்காண்
 வேதியன்காண் வேதவிதி காட்டி னான்காண்
 விண்ணிழிதண் வீழி மிழலை யானே.
 
 | 4 | 
| நெய்யினொடு பாலிளநீ ராடி னான்காண் நித்தமண வாளனென நிற்கின் றான்காண்
 கையின்மழு வாளொடுமான் ஏந்தி னான்காண்
 காலனுயிர் காலாற் கழிவித் தான்காண்
 செய்யதிரு மேனிவெண் ணீற்றி னான்காண்
 செஞ்சடைமேல் வெண்மதியஞ் சேர்த்தி னான்காண்
 வெய்ய கனல்விளையாட் டாடி னான்காண்
 விண்ணிழிதண் வீழி மிழலை யானே.
 
 | 5 | 
| கண்டுஞ்சுங் கருநெடுமால் ஆழி வேண்டிக் கண்ணிடந்து சூட்டக்கண் டருளு வான்காண்
 வண்டுண்ணும் மதுக்கொன்றை வன்னி மத்தம்
 வான்கங்கைச் சடைக்கரந்த மாதே வன்காண்
 பண்டங்கு மொழிமடவாள் பாகத் தான்காண்
 பரமன்காண் பரமேட்டி யாயி னான்காண்
 வெண்டிங்கள் அரவொடுசெஞ் சடைவைத் தான்காண்
 விண்ணிழிதண் வீழி மிழலை யானே.
 
 | 6 | 
| கற்பொலிதோள் சலந்தரனைப் பிளந்த ஆழி கருமாலுக் கருள்செய்த கருணை யான்காண்
 விற்பொலிதோள் விசயன்வலி தேய்வித் தான்காண்
 வேடுவனாய்ப் போர்பொருது காட்டி னான்காண்
 தற்பரமாந் தற்பரமாய் நிற்கின் றான்காண்
 சதாசிவன்காண் தன்னொப்பா ரில்லா தான்காண்
 வெற்பரையன் பாவை விருப்பு ளான்காண்
 விண்ணிழிதண் வீழி மிழலை யானே.
 
 | 7 | 
| மெய்த்தவன்காண் மெய்த்தவத்தில் நிற்பார்க் கெல்லாம் விருப்பிலா இருப்புமன வினையர்க் கென்றும்
 பொய்த்தவன்காண் புத்தன் மறவா தோடி
 எறிசல்லி புதுமலர்க ளாக்கி னான்காண்
 உய்த்தவன்காண் உயர்கதிக்கே உள்கி னாரை
 உலகனைத்தும் ஒளித்தளித்திட் டுய்யச் செய்யும்
 வித்தகன்காண் வித்தகர்தாம் விரும்பி யேத்தும்
 விண்ணிழிதண் வீழி மிழலை யானே.
 
 | 8 | 
| சந்திரனைத் திருவடியாற் தளர்வித் தான்காண் தக்கனையும் முனிந்தெச்சன் தலைகொண் டான்காண்
 இந்திரனைத் தோள்முறிவித் தருள்செய் தான்காண்
 ஈசன்காண் நேசன்காண் நினைவோர்க் கெல்லாம்
 மந்திரமும் மறைப்பொருளு மாயி னான்காண்
 மாலொடயன் மேலொடுகீழ் அறியா வண்ணம்
 வெந்தழலின் விரிசுடரா யோங்கி னான்காண்
 விண்ணிழிதண் வீழி மிழலை யானே.
 
 | 9 | 
| ஈங்கைப்பேர் ஈமவனத் திருக்கின் றான்காண் எம்மான்காண் கைம்மாவி னுரிபோர்த் தான்காண்
 ஓங்குமலைக் கரையன்றன் பாவை யோடும்
 ஓருருவாய் நின்றான்காண் ஓங்கா ரன்காண்
 கோங்குமலர்க் கொன்றையந்தார்க் கண்ணி யான்காண்
 கொல்லேறு வெல்கொடிமேற் கூட்டி னான்காண்
 வேங்கைவரிப் புலித்தோல்மே லாடை யான்காண்
 விண்ணிழிதண் வீழி மிழலை யானே.
 
 | 10 | 
| திருச்சிற்றம்பலம் | 
| திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம் | 
| ஆறாம் திருமுறை | 
| 6.53 திருவீழிமிழலை - திருத்தாண்டகம் | 
| மானேறு கரமுடைய வரதர் போலும் மால்வரைகால் வளைவில்லா வளைத்தார் போலும்
 கானேறு கரிகதற வுரித்தார் போலுங்
 கட்டங்கங் கொடிதுடிகைக் கொண்டார் போலுந்
 தேனேறு திருஇதழித் தாரார் போலுந்
 திருவீழி மிழலையமர் செல்வர் போலும்
 ஆனேற தேறும் அழகர் போலும்
 அடியேனை ஆளுடைய அடிகள் தாமே.
 
 | 1 | 
| சமரமிகு சலந்தரன்போர் வேண்டி னானைச் சக்கரத்தாற் பிளப்பித்த சதுரர் போலும்
 நமனையொரு கால்குறைத்த நாதர் போலும்
 நாரணனை இடப்பாகத் தடைத்தார் போலுங்
 குமரனையும் மகனாக வுடையார் போலுங்
 குளிர்வீழி மிழலையமர் குழகர் போலும்
 அமரர்கள்பின் அமுதுணநஞ் சுண்டார் போலும்
 அடியேனை ஆளுடைய அடிகள் தாமே.
 
 | 2 | 
| நீறணிந்த திருமேனி நிமலர் போலும் நேமிநெடு மாற்கருளிச் செய்தார் போலும்
 ஏறணிந்த கொடியுடையெம் மிறைவர் போலும்
 எயில்மூன்று மெரிசரத்தா லெய்தார் போலும்
 வேறணிந்த கோலமுடை வேடர் போலும்
 வியன்வீழி மிழலையுறை விகிர்தர் போலும்
 ஆறணிந்த சடாமகுடத் தழகர் போலும்
 அடியேனை ஆளுடைய அடிகள் தாமே.
 
 | 3 | 
| கைவேழ முகத்தவனைப் படைத்தார் போலுங் கயாசுரனை அவனாற்கொல் வித்தார் போலுஞ்
 செய்வேள்வித் தக்கனைமுன் சிதைத்தார் போலுந்
 திசைமுகன்றன் சிரமொன்று சிதைத்தார் போலும்
 மெய்வேள்வி மூர்த்திதலை யறுத்தார் போலும்
 வியன்வீழி மிழலையிடங் கொண்டார் போலும்
 ஐவேள்வி ஆறங்க மானார் போலும்
 அடியேனை ஆளுடைய அடிகள் தாமே.
 
 | 4 | 
| துன்னத்தின் கோவணமொன் றுடையார் போலுஞ் சுடர்மூன்றுஞ் சோதியுமாய்த் தூயார் போலும்
 பொன்னொத்த திருமேனிப் புனிதர் போலும்
 பூதகணம் புடைசூழ வருவார் போலும்
 மின்னொத்த செஞ்சடைவெண் பிறையார் போலும்
 வியன்வீழி மிழலைசேர் விமலர் போலும்
 அன்னத்தேர் அயன்முடிசேர் அடிகள் போலும்
 அடியேனை ஆளுடைய அடிகள் தாமே.
 
 | 5 | 
| மாலாலும் அறிவரிய வரதர் போலும் மறவாதார் பிறப்பறுக்க வல்லார் போலும்
 நாலாய மறைக்கிறைவ ரானார் போலும்
 நாமவெழுத் தஞ்சாய நம்பர் போலும்
 வேலார்கை வீரியைமுன் படைத்தார் போலும்
 வியன்வீழி மிழலையமர் விகிர்தர் போலும்
 ஆலாலம் மிடற்றடக்கி அளித்தார் போலும்
 அடியேனை ஆளுடைய அடிகள் தாமே.
 
 | 6 | 
| பஞ்சடுத்த மெல்விரலாள் பங்கர் போலும் பைந்நாகம் அரைக்கசைத்த பரமர் போலும்
 மஞ்சடுத்த மணிநீல கண்டர் போலும்
 வடகயிலை மலையுடைய மணாளர் போலுஞ்
 செஞ்சடைக்கண் வெண்பிறைகொண் டணிந்தார் போலுந்
 திருவீழி மிழலையமர் சிவனார் போலும்
 அஞ்சடக்கும் அடியவர்கட் கணியார் போலும்
 அடியேனை ஆளுடைய அடிகள் தாமே.
 
 | 7 | 
| குண்டரொடு பிரித்தெனையாட் கொண்டார் போலுங் குடமூக்கி லிடமாக்கிக் கொண்டார் போலும்
 புண்டரிகப் புதுமலரா தனத்தார் போலும்
 புள்ளரசைக் கொன்றுயிர்பின் கொடுத்தார் போலும்
 வெண்டலையிற் பலிகொண்ட விகிர்தர் போலும்
 வியன்வீழி மிழலைநக ருடையார் போலும்
 அண்டத்துப் புறத்தப்பா லானார் போலும்
 அடியேனை ஆளுடைய அடிகள் தாமே.
 
 | 8 | 
| முத்தனைய முகிழ்முறுவ லுடையார் போலும் மொய்பவளக் கொடியனைய சடையார் போலும்
 எத்தனையும் பத்திசெய்வார்க் கினியர் போலும்
 இருநான்கு மூர்த்திகளு மானார் போலும்
 மித்திரவச் சிரவணற்கு விருப்பர் போலும்
 வியன்வீழி மிழலையமர் விகிர்தர் போலும்
 அத்தனொடும் அம்மையெனக் கானார் போலும்
 அடியேனை ஆளுடைய அடிகள் தாமே.
 
 | 9 | 
| கரியுரிசெய் துமைவெருவக் கண்டார் போலுங் கங்கையையுஞ் செஞ்சடைமேற் கரந்தார் போலும்
 எரியதொரு கைதரித்த இறைவர் போலும்
 ஏனத்தின் கூயெனிறு பூண்டார் போலும்
 விரிகதிரோ ரிருவரைமுன் வெகுண்டார் போலும்
 வியன்வீழி மிழலையமர் விமலர் போலும்
 அரிபிரமர் துதிசெயநின் றளித்தார் போலும்
 அடியேனை ஆளுடைய அடிகள் தாமே.
 
 | 10 | 
| கயிலாய மலையெடுத்தான் கதறி வீழக் கால்விரலால் அடர்த்தருளிச் செய்தார் போலுங்
 குயிலாய மென்மொழியாள் குளிர்ந்து நோக்கக்
 கூத்தாட வல்ல குழகர் போலும்
 வெயிலாய சோதிவிளக் கானார் போலும்
 வியன்வீழி மிழலையமர் விகிர்தர் போலும்
 அயிலாய மூவிலைவேற் படையார் போலும்
 அடியேனை ஆளுடைய அடிகள் தாமே.
 
 | 11 | 
| திருச்சிற்றம்பலம் |